Posted in Uncategorized

19ம் நூற்றாண்டின் தொடக்க ஆண்டகளில் பிள்ளையார், வயிரவர் என்று அழைக்கப் பெற்ற ஒரு சைவ ஆசாரசீலர் தற்போதைய கோயில் தெற்கு வீதியில் அமைக்கப் பெற்றிருந்த மடத்தில் பிள்ளையாரை எழுந்தருளச் செய்த சில காலத்திற்குள் வேதாரணியத்தில் இருந்து கணபதி ஐயர் என்ற பெயருடைய ஒரு சைவக் குருக்களை அழைத்து வந்து பூஜைகள் செய்வித்து வந்தாரெனத் தெரிய வருகிறது.
பூஜைகள் சிவஸ்ரீ தியாகையர் அவர்களாலும் நடத்தப் பெற்று வந்தன.அக்காலங்களில் கப்பல் வாணிபம் தொடங்கப் பெற்று செல்வனே நடந்து வந்ததால் கப்பற்தொழில் சம்பந்தப்பட்ட எல்லோரிடமிருந்தும் மகமைகள் வசூலிக்கப் பெற்று கோயிலுக்கு சேர்க்கப் பெற்று வந்தன.
01.02.1846ல் பிரசித்த நொத்தாரிசு கே.கணபதிப்பிள்ளை முன்னிலையில் எழுதப் பெற்ற உறுதியாலும் மகமை தொகையில் என்ன விழுக்காடு நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் கோயிலுக்கு கொடுக்கப்பட வேண்டும் என்கிற விபரம் தெளிவாக காட்டப்பட்டிருக்கிறது. இவ்வுறுதிக்ள ஊரிலுள்ள பல பெரியார்கள் முடித்துக் கொடுத்திருக்கிறார்கள். மகமைகள் வசூலிப்பதும் செலவு செய்வதும் பெரியவர் திருமேனியார் வெங்கடாசல பிள்ளை உட்பட ஐவர் கொண்ட ஒரு குழுவினரிடம் ஒப்படைக்கப் பெற்றது. அப்போது பிள்ளையார் கோயிலுக்கு ஆறுமுகம் முருகுப்பிள்ளை என்னும் பெரியார் மணியமாயிருந்தார்.
1867ம் ஆண்டு சிவன்கோயில் சங்குத்தாபனம் செய்யப் பெற்ற இரண்டு ஆண்டுகளில் திரு. வெங்கடாசலம் பிள்ளை சிவன் கோயில் திருப்பணியோடு ஒன்றி விட்டமையால் அவர் பிற கோயில்களின் வேலைகளில் இருந்து விலகி விட்டார். இக்கால கட்டத்தில் கந்தக் குட்டியார் வேலுப்பிள்ளை என்னும் சைவஆசாரசீலர் பிள்ளையார் கோயில் மேற்பார்வையாளரானார். இவர் பிள்ளையாரை முடிந்த வரை ஆகமவிதிப்படி அமைவாகக் கட்டப்பெற்ற கோயிலில் எழுந்தருளச் செய்ய வேண்டு மென உறுதி பூண்டார். சிறிது சிறிதாக மூலஸ்தானம் தம்ப மண்டபம், மதில் முதலியவை கட்டி பிள்ளையாரை மூலஸ்தானத்தில் எழுந்தருளச் செய்து 1884ல் பிரதிட்டா அபிஷேகம் செய்வித்தார்கள். இவருக்கு ஆண் பிள்ளைகள் இல்லாமையால் தன் சகோதரி மகளின் கணவர் சண்முகம் பிள்ளையை தன்னுடைய திருப்பணி வேலைகளில் சேர்த்துக் கொண்டார்கள் கொடித்தம்பம் நிறுத்தித்தேரும் செய்வித்து 1892 – 1912ம் ஆண்டுக்கிடையில் வருடாந்தர பெருந்திருவிழாவையும் தொடக்கி வைத்தார்கள்.

அவர்கள் 1912ம் ஆண்டளவில் கந்தக் குட்டியார் கதிரிப்பிள்ளை நடராசா என்னும் பெரியாரிடம் கோயில் மேற்பார்வையை ஒப்படைத்தார்கள். நடராசா அவர்கள் தம்ப மண்டபத்தையும் கட்டி முடித்தரர்கள். திருச்சிற்றப்பலப்பிள்ளையார். ஊஞ்சல் பராக்குபாக்களைக் கொண்ட ஒரு சிறு நூலையும் 1916ம் ஆண்டு மதுரையில் பதிப்பித்தார்கள்.
1918ம் ஆண்டில் கோயில் பரிபாலனம் இவரின் தமையனார் க.க. அருளம்பலம் அவர்களிடம் சேர்ந்தது.
1930 – 1933ம் ஆண்டுகளில் செல்லையா தில்லையம்பலமும் ஆறுமுகம் விசுவலிங்கமும் ஒருவர் பின் ஒருவராக கோயிலை பரிபாலித்து வந்தார்கள்.
1933 – 1937ம் ஆண்டுகளில் ம.சாம் பசிவம்மணியம் ஆனார். இவர் காலத்தில் சுற்றுமதில் வேலை நடந்தது. அவர் விலகிக் கொள்ள பொ.தங்கவேலாயுதம் அவர்கள் மணியமானார். இவர் காலத்தில் கோபுரத்தின் கீழ் பகுதி திரு கார்த்திகேசு (ஓவசியர்) பெண் சகுந்தலையம்மாவாலும் கட்டி முடிக்கப்பட்டது.
1905ம் ஆண்டளவில் திரு நா.செல்வமாணிக்கம் அவர்களிடம் நிர்வாகம் ஒப்படைக்கப்பட்டது. அவர் கோயில் தொண்டில் தம்முடைய முழுச்செயலையும் சிந்தனையும் அர்ப்பணித்தார்கள்.
1950 – 1970ம் ஆண்டுகளில் வல்வை பொருளாதாரத்தில் சிறந்திருந்தது. இச்சிறப்பையும் வளர்ச்சியையும் நன்கு அவர் பயன்படுத்திக் கொண்டார். மூலஸ்தானத்தையும் திருச்சபையையும் வள்ளி தெய்வானை சமேதரராக முருகக் கடவுளுக்கும் புதிய கோயில் கட்டப் பெற்றது. நாகதம்பிரான் கோயில் மேலுள்ள பதுமபீடம் விமான வேலையாய் முடிக்கப் பெற்றது. பொது மக்களையும் அப்போதைக்கப் போது கண்டு பேசி பணம் திரட்டும் வேலையில் அயராது உழைத்த பணி திரு நா.செல்லமாணிக்கம் (அப்பா) அவர்களையெ சாரும். இவை யாவும் கவினுறச் செய்யப் பெற்ற பின்பு கும்பாபிஷேகம் 07.06.1970ல் சிறப்புற நடந்தேறியது. அதைச் சிறப்பிக்க திருமுருக கிருபானந்த வாரியார் சிறப்பு பிரசங்கம் செய்தார்.
கோயிலின் பகுதி திருப்பணி செய்தவர்கள்
Posted in Uncategorized

யாழ்ப்பாணத்து வல்வெட்டித்துறை என்னும் பேரூரின் புகழை ஓங்கச் செய்து மிளிர்ந்து கொண்டிருப்பது அங்குள்ள சிவன் கோயிலாகும். கோயில்களுடன் தம் பெயரைப் பினைத்து புகழெய்தியவர் மகனார் பெரியதம்பியார் என்னும் காரணப்பெயர் பெற்ற வேங்கடாசலப் பிள்ளை. இப்பெரியதம்பியார் சித்திரபானு ஆண்டு மார்கழித்திங்கள் 6ம் நாள் (19.12.1822) வல்வையம் பதியில் பிறந்தார்.
இவர் தந்தையார் வேலாயுதர் திருமேனியார் வல்வையம்பதியின் திருசிற்றம்பலப் பிள்ளையார் கோயிலுக்குத் தருமகர்த்தாவாக இருந்து அதனை வேறு சில பெரியார்களிடம் ஒப்படைத்து, வல்வை முத்துமாரி அம்மன் கோயிலுக்கு தருமகர்த்தாவாக ஆயினார். இத்திருமேனியார் சிவபதமெய்தவே இவர் தமையன் மகன் சங்கரியார் தருமகர்த்தாவாயினர். இச்சங்கரியாரே அம்மன் கோயிலில் இப்போதுள்ள (பழமை வாய்ந்த) சப்பரத்தைச் செய்வித்தவர். திருமேனியார் பெரியதம்பியார் இப்போது உள்ள சுற்று மதிலையும் அமைத்தார்.
அம்மன் கோயில் நடாத்தி வருங்காலத்தில் ஒருநாள் திருமேனியார் தமது மகன் பெரியதம்பியார் கனவில் தோன்றி சிவனுக்கு கோயிலெடுக்கும்படி பணித்தார். பெரியதம்பியார் தமக்குப் பரம்பரையாக வந்த தோட்டங்கள் வயல்களைத் திருத்தி பயிரிட்டும் புதிய பல காணிகளை விலைக்கு வாங்கியும் செல்வத்தைப் பெருக்கினார். பன்னிரெண்டு கப்பல்கள் அமைத்து கடல் வணிகஞ் செய்து டிபரு வணிகப்பிரபு ஆகினார். முதன் முதலாக பெரியவர் அம்மன் கோயிலுக்குத் தெற்கேயுள்ள 60 பரப்பு காணியை விலைக்கு வாங்கினார். இக்காணி கல் நிரம்பியும், கரடுமுரடானதாயும், பற்றையும் செடிகளும் நிரம்பியதாயும் இருந்தது. பெரியவர் அம்மன் கோயிலுக்கு தென்கிழக்கேயுள்ள மடத்தில் இருந்து கொண்டு மேற்படி காணியை துப்புரவு செய்து கொண்டு அருள்மிகு வாலாம்பிகா சமேத வைத்தீஸ்வரப் பெருமானுக்கும் கோயில் கட்டுவதற்காக 1867ம் ஆண்டு அத்திவாரம் இடுதலாகிய சங்கத்தாபனத்தை செய்வித்தார்.
சிறந்த சிற்பிகள் பலவகைக் கம்பியர் இந்தியாவிலிருந்து வந்து கோயில் வேலைகள இடம் பெறச் செய்தனர். அக்காலத்தில் பிரபுவாயிருந்த விசுவநாதர் என்னும் பெரியார் காசிக்குச் சென்று அங்கிருந்து சிவலிங்கத்தைக் கொண்டு வந்து சேர்த்தார்.
புனராவர்த்தன சம்புரோட்சண கும்பாபிஷேகம் பிலவங்க வருடம் வைகாசி மாதம் 28ம் திகதியான 11.06.1967ல் வெகுசிறப்பாக பக்தி சிரத்தையுடன் நடந்தேறியது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோயில் முன்னால் பெரும் பெரும் தெருவை இணைக்கும் சிவபுர வீதி திறக்கப்பட்டது.
அதற்கு அதை அண்டிய மக்கள் தங்கள் நிலத்தை அன்பு உபகாரம் செய்தார்கள். வசந்தமண்டபம் வாசலுக்குத் தெற்கேயுள்ள பகுதியையும் அம்மன் வாசலையும் இணைத்து இரண்டாம் வீதியை பெரியார் வி.சுப்பிரமணியம், எஸ்.எஸ். சண்முகம் இருவரும் நல்லமுறையில் மூடிக்கட்டிய திருப்பணியை 1970ம் ஆண்டில் நிறைவேற்றினார்கள். திரு மா.குமாரசாமி அவர்கள் ஆறுமுகசுவாமி விக்கிரத்தையும் வள்ளி தெய்வானை விக்கிரகங்களையும் பஞ்ச லோகத்தில் அழகாக செய்வித்து நடராஜர் மண்டபத்தில் 1977ம் ஆண்டுத் தைப்பூசதினத்தில் ஆகமவிதிப்படி பிரதிட்டை செய்தலாகிய திருப்பணியை நிறைவேற்றினார்.
வல்வெட்டிப் பெருமக்கள் சிவனுக்கு அழகுற சித்திரத் தேரை செய்வித்தார்கள். அவர்கள் தான் தேர்த்திருவிழாவை வருடாவருடம் யாழ்குடாநாட்டின், தென் இந்தியாவின் பிரபல நாதஸ்வர இன்னிசை விற்பனர்களுடன் பெரும் செலவுடன் நடாத்துகிறார்கள். பெரியார் எஸ். வைரமுத்து எம்பெருமானுக்கு வெள்ளி இடபவாகனம் சிறந்த முறையில் அமைத்து உள்ளார்.
திரு கார்வண்ணசாமி அவர்கள் தனது உபயமாக ஐம்பொனிலான மகாவிஷ்ணு விக்கிரகத்தையும் திரு கே.இரத்தினசிங்கம் அவர்கள் சரஸ்வதியையும் பிரதி~;டை செய்து உள்ளார்கள். வல்வை சிவன் கோயில்
குரு பரம்பரை
குரு பரம்பரை முதலாவது கும்பாபிஷேகம் 1883ம் ஆண்டு சுபானுவருடம் வைகாசி 27ம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதனை அக்காலத்தில் பிரசித்தி பெற்ற குமாரசாமிகுருக்கள் நடாத்தி வைத்தார். அன்று தொடக்கம் பருத்தித்துறையைச் சேர்ந்த சண்முகக்குருக்கள் அவர்கள் பூசைகளை நடாத்தி வந்தார்கள். 1908ம் ஆண்டு தொடக்கம் நீர்வேலியில் ஜனனமும், கோப்பாயில் வாசம் செய்தவரும் ஆரியதிராவிட மொழியில் திறமை உடையவரும் கிரியா விற்பன்னரும், குரு இலட்சணம் நிறைந்தவருமான கார்த்திகேசுக்குருக்கள் அவர்கள் அக்கால எஜமான் அவர்களால் நியமிக்கப்பட்டார். இவர் தொடர்ச்சியாக 24 ஆண்டுகள் ப+சை உற்சவம் பிரதிஸ்டை முதலியவற்றைச் செய்து வந்தார். இவருடைய காலத்தில் 1919ம் ஆண்டு புனராவர்த்தன கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதில் இவருடைய சிறிய தந்தையார் இராமலிங்க குருக்கள் (மாப்பிள்ளைக்குருக்கள்) இவருடைய விருப்பப்பழ பிரதான ஆசாரியாராக இருந்து கும்பாபிஷேகம் செய்தார். அதன்மேல் இவருடைய் மகன் நீலகண்டக்குருக்கள் (சின்னப்பாக்குருக்கள்) இவருடன் கூட இருந்து பூசைகளை நடாத்தி வந்தார்கள். 1930ல் கார்த்திகேசுக்குருக்கள் இறைவனடி சேர்ந்தார். அதன் மேல் நீலகண்டக்குருக்களே பிரதான ஆசாரியராக இருந்து கோயில் பூஜா கருமங்களை நடாத்தி வந்தார். இவருடன் இவரது மகன் பரமேசுவரக்குருக்கள் 1942ம் ஆண்டு உதவியாக இருந்து பூஜைகளைச் செய்து வந்தார். 1954ம் ஆண்டு நீலகண்டக் குருக்கள் இறைவனடி சேர்ந்தார். தற்போது அவரின் மூத்தமகன் மனோகரக்குருக்கள் நடாத்தி வந்தார் .
Posted in Uncategorized
வல்வை நகரசபை உபதலைவரும், நாடகம், விளையாட்டுத்துறை போன்ற கலையம்சங்களினால் வல்வக்குப் பெருமை சேர்த்தவருமாகிய திரு.பொ.வேலும்மயிலு (சிவபெருமான்) அவர்களால் இப்பாடல் ஆக்கம் பெற்றது.

Posted in Uncategorized
இவ் ஆங்கில வித்தியாசாலை வல்வைப் பெரியாராகிய கு. சிதம்பரப்பிள்ளையவர்களால் 1896ல் தொடங்கப் பெற்று ஆலடியில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. பாடசாலை தொடங்குவதற்கு முதல்நாள் மாலை சிதம்பரப்பிள்ளை அவர்கள் வல்வையில் உள்ள பெற்றோர்களை நெடிய காட்டு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் கோயில் வீதியில் ஒரு கூட்டத்திற்கு அழைத்து உருக்கமான சொற்பொழிவாற்றினார். அதில் அவர் ஷதான் ஒரு சிறிய குடும்பத்தைச் சேர்ந்தவரென்றும் ஆங்கிலம் படிக்க ஆசைப்பட்டும் இவ் ஊரில் இந்த வசதி இல்லாததால் பருத்தித்துறைக்கு ஒவ்வொரு நாளும் காலையில் நடந்து சென்று மதிய உணவிற்கு சந்தையில் கிடைக்கும் மரவள்ளிக் கிழங்கை இரண்டு சதத்திற்கு வாங்கி சாப்பிட்டு மாலையிலும் நடந்து வந்து மிகவும் கஸ்டத்தோடு ஆங்கிலம் கற்று அரசாங்க வேலையிலும் சேர்ந்ததாகவும் தான் பட்ட கஸ்டம் மற்றவர்களுக்கு ஏற்படக்கூடாது என்பதற்காக இவ்வூரில் ஆங்கில வித்தியாசாலையை ஆரம்பிப்பதாகவும் அதற்கு ஊரவர்கள் ஆதரிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். இப்போது அப்பாடசாலை அவர் நினைவாக சிதம்பராக் கல்லூரியாக வளர்ந்திருக்கின்றது
1912ம்
ஆண்டு பள்ளிக்கூட வளர்ச்சியினால் இடம்போதாமை காரணமாக ஆலடியிலிருந்து ஊரிக்காட்டுக்கு மாற்றப்பட்டது. சிதம்பரப்பிள்ளை அமரராகி விடவே பாடசாலையின் முகாமைத்துவம் திரு ஞானசேகரப்பிள்ளை தையல்பாகர் அவர்களிடம் வந்து சேர்ந்தது. இவர்களின் மேற்பார்வையில் 1925ம் ஆண்டளவில் திரு வானமலை ஐயங்கார் அவர்கள் (பி.ஏ. சென்னை) அதிபராக நியமிக்கப்பட்டார். பின்பு திரு கிருஸ்ண ஐயர் (பி.ஏ) அவர்களும் ஆசிரியராகச் சேர்ந்து கொண்டார். பாடசாலை அதிதுரிதமாக வளரத் தொடங்கியதும் வருடம் ஒரு வகுப்பாக உயர்ந்தது. திரு சிவசைலம்ஐயர் (பி.ஏ.சென்னை) திரு பு.க.முத்துக்குமாரசாமி (பி.ஏ.இரங்கூன்) அவர்களும் திரு அரியரத்தினம் உடுப்பிட்டி, திரு இரத்தினம் உடுப்பிட்டி, திரு நடராசா (பி.ஏ) பொலிகண்டி, திரு நடராசா ஊரிக்காடு, திரு ச. சத்தியமூர்த்தி (பி.எஸ்.சி.) திரு ச.வல்லிபரம் (பி.எஸ்.சி.) இவர்களின் சேவையால் பாடசாலையும் வல்வை மக்களும் வளர்ந்தனர். 1948 தொடக்கம் 1960 வரையில் கல்விப் பொதுத்தராதர சாதாரண வகுப்பில் சித்தியடைந்த சகல மாணவர்களும் உடனுக்குட்ன அரசசேவையில் சேர்ந்தனர். திரு தையல்பாகர் அவர்களின் மகன் திரு அருள்சுந்தரம் அதிபராக பலகாலம் கடமையாற்றினார். பின்னர் திரு ச.சத்தியமூர்த்தி அவர்களும் அதன் பின்னர் பலகாலம் திரு கோ.செல்வவிநாயகம் கடமையாற்றி இளைப்பாறியதும் திரு யோகச்சந்திரன் அதிபராக இருந்துள்ளார்.(தற்போதைய விபரம் தெரிந்ததும் அதிபர் பட்டியல் தொடரும்)

இக்கல்லூரியில் தொண்டமானாறு பொலிகண்டி, திக்கம், கம்பர்மலை, வல்வெட்டி போன்ற அயல் கிராமங்களில் இருந்தும் மாணவர்கள் கல்வி கற்கின்றார்கள். வல்வையைப் பிறப்பிடமாகவும் யாழ்.நகரில் பிரபல வர்த்தகருமான திரு செ.கந்தசாமிதுரை (கட்டிஅப்பா) தனது தந்தையார் நினைவாக (டாக்டர் வி.கே. செல்லையா) ரூபா 50,000 வைப்புநிதியில் வைத்து அதனால் வரும் வருட வட்டி இரசாயன பாடத்தில் முதன்மையாக வந்து (உயர்தரம்) பல்கலைக்கழகம் புகும் மாணவர்களுக்கு அளிக்கும்படி கொடுத்துள்ளார். 1967ம் ஆண்டு இருமாடிக்கட்டிடம் அமைக்கப்பட்டது. இதற்கு சிதம்பராக்கல்லூரி கொழும்பு பழைய மாணவர் சங்கமும், திருகோணமலை பழைய மாணவர் சங்கமும் வல்வை பொதுமக்களின் சங்கமும் முன்னின்று உதவி புரிந்தன.

பாடசாலையில் உயர்கல்வியைத் தொடர முடியாது விலகிய மாணவர்களுக்கு வானொலி, தொலைக்காட்சி போன்றவற்றைப் பழுதுபார்த்தல் பயிற்சியினை நடாத்துகின்றார்கள். வல்வை கல்வி அபிவிருத்திச்சங்கம் என்ற பெயரில் டாக்டர் எஸ்.ராசேந்திரன் அவர்களும் திரு ரி.யோகசபாதிபிள்ளை அவர்களும் ஒரு லட்சம் ரூபா வரை நன்கொடை அளித்திருந்தனர். கனடா வல்வை நலன்புரிச் சங்கமும் வருடா வருடம் தமது பங்களிப்பைச் செலுத்தி வருகின்றது.
(வல்வைநகர் வலைப்பதிவில் இருந்து தகவல்கள் திரட்டப்பட்டது. நன்றி)
ஆவலர்களிடம் இருந்து தகவல்கள் புகைப்படங்கள் எதிர்பார்ககப்படுகின்றது.
Posted in Uncategorized
ஆரிய சக்கரவர்த்திகள் யாழ்ப்பாணம் வந்த காலமாகிய 1048ம் ஆண்டுக்குப் பின்னும் பறங்கியர் யாழ்ப்பாணம் வந்த காலம் ஆகிய 1617ம் ஆண்டுக்கு முன்னும் இக் கோயில் உண்டாகியிருக்கலாம் என அபிப்பிராயப்படுகிறார்கள். முதலில் ஒரு கொட்டகையாய் இருந்து காலாகாலங்களில் சாந்துக் கட்டிடமாய் வளர்ந்திருக்க வேண்டும் எனவும் கூறுகிறார்கள். தற்போது ஈராக், ஈரான் என்று அழைக்கப்படும் பழைய சுமேதிய நாட்டில் பல்லாயிரம் வருடங்களுக்கு முன் வாழ்ந்த சுமேதிய மறவர்களென்ன இவர்களுக்குப் பல நூறு சந்ததிகளுக்குப் பின் வந்த ஆரியச் சக்கரவர்த்திகளாகிய மறவர்களென்ன இவர்களெல்லாம் தங்கள் பாதுகாவல் தெய்வமாய் பெண் தெய்வத்தையே வணங்கி வந்தார்கள். வள்ளுவப் பெருந்தகைக்கு உடன் பிறந்தாளாகக் கூறப்படும் ஒளவையாரும் தாம் பாடிய ஆத்திசூடியில் ஷதாயிற் சிறந்தொரு கோயிலுமில்லை என்று தானே அருளினார். நல்லூர் வீரமா காளி அம்மன், பருத்தித்துறை பத்திரகாளி அம்மன், தொண்டமானாறு வீரமாகாளி அம்மன், இடைக்காடு, மாதகல், அராலி, நயினாதீவு நாகப+~ணியம்மை ஈறாக எங்கும் அம்மன் கோயில்களே உண்டாகி இருக்கின்றன.

வல்வெட்டித்துறைக்கு கோடியாய் கரையில் இருந்து புறப்பட்ட தோணி ஒன்றில் உதவி கேட்டு வந்த வயோதிபமாது தன்னையும் வல்வையில் கொண்டு சென்று இறக்கும் படி கோர அவர்கள் அதன்படி ஏற்றி வந்து வல்வைக் கரையில் இறக்கியதும் வயோதிப மாது மறைந்து விட்டனihம். இது தான் முத்துமாரி அம்மன் கோயில் தோன்றிய வரலாறு எனக் கூறப்படுகின்றது. 1796ல் பெற்ற அரசினர் இடாப்பில் இக்கோயில் காட்டப் பெற்றிருக்கின்றது.01.02.1846ல் பிரசித்த நொத்தாரிசு கதிர்காமர் சிதம்பர நாதர் முன்னிலையில் இராசிந்தான் முத்துமாரி அம்மன் கோயில் நெடியகாடு திருச்சிற்றம்பலப்பிள்ளையார் கோயில்களுக்கு மகமை எப்படி கொடுக்கப்பட வேண்டும் என முடிவு செய்து இருக்கின்றார்கள். 1864ல் எழுதப் பெற்ற அரசினர் அறிக்கையிலும் புண்ணிய மணியகாரனால் அம்மன் கோயில் கல்லால் கட்டப் பெற்றதென்னும் சித்திரை மாதத்தில் 15 நாட்கள் திருவிழாக்கள் நடந்தது எனவும் குறிக்கப் பெற்றிருக்கின்றது. சில ஆண்டுகள் திருமேனியார் வெங்கடாசலம் மணியமாயிருந்து திருப்பணிகளும் செய்திருக்கின்றார்கள். அப்பால் பெ.கதிர் காமத்தம்பி அதன் பிறகு சு.க.தம்பிப்பிள்ளை மணியமாக இருக்கும் போது 1904ம் ஆண்டில் ஒரு தடவை புனராவர்த்தன கும்பாபிN~கம் நடந்திருக்கின்றது. பின்னர் ஆ.நாகமுத்து சு.க.தம்பி;ப்பிள்ளை நா.கனகசுந்தரம், ஆ. வேலுப்பிள்ளை ஆகியோர் மணியமாக இருந்த காலத்தில் தான் எழுந்தருளி முத்துமாரி அம்மன் இந்தியாவில் இருந்து தருவிக்கப்பட்டதாக கூறுகிறார்கள்.வ.வ. இராமசாமிபிள்ளை 1933ம் ஆண்டு மணியமாக நியமனம் பெற்றவுடன் பழைய கட்டிடங்கள் யாவும் இடிக்கப்பெற்று கற்கட்டிடங்களாகவும் கட்டப் பெற்றன. இங்ஙனமாக (வ.இ.அப்பா) காலத்தில் புதுப்பித்து கட்டப் பெற்றவற்றின் விபரங்களாவன
1. கர்ப்பக்கிரகமும் அர்த்த மண்டபமும் – சி.செல்லத்துரையும் பெண் வள்ளி அம்மாளும்
2. பிள்ளையார் – பொ. தங்கவேலா யுதமும் பெண் இராசரெத்தினமும்
3. முருகையா – சி. ஆனந்தமயிலும் பெண் விசாலாட்சியும்
4. காத்தலிங்கம் – வ.இ.வைத்தியலிங்கமும் பெண் சௌந்தரி அம்மாளும்
5. சண்டிசுவரி – ஆ. செல்லத்துரையும் பெண் தங்கரெத்தினமும்
6. தீர்த்தக்கிணறு – தா.சின்னத் தம்பியும் பெண் தங்ககெண்ணும்
7. மின்வெளிச்ச அறை – சி.வேலும் மயிலும் ஐயர்
8. வசந்த மண்டபம் – வே. வ.சிவப்பிராகசம், மு.விசுவலிங்கம்
9. யாகசாலை – வி.செல்வவிநாயகமும் பெண் விசாலாட்சிப்பிள்ளையும்
10. திருச்சபை – வ.இராமசாமிப்பிள்ளையும் பெண் இராசம்மாளும்
11. மகாமண்டபம், தரிசன மண்டபம் – வல்வைப் பொதுமக்கள்
12. நந்திபலிபீடம் – மா. இராசா
இவ்வேலைகள் முடித்து 1935ம் ஆண்ட யுவ வருடம் ஆனி மாதம் 24ம் திகதி வேதாரணியம் சிவஸ்ரீ ச.சோமசுந்தரக்குருக்கள் அவர்களால் சம்புரோட்சனம் ஆகமவிதிப் படி செய்யப்பெற்றது. 1943ம் ஆண்டு மணிக்கோபுரமும் மணியும் வல்வைப் பொதமக்களால் செய்யப்பெற்றன. தேர்முட்டி சேதமடைந்திருந்தமையால் அதை நல்லமுறையில் புதிதாக திரு. சி.வி~;ணுசுந்தரம் அவர்கள் கட்டுவித்தார்கள். ப+ங்காவன மண்டபம் பொதுமக்களால் கட்டப்பெற்றது. 1957ம் ஆண்டில் 12ம் உற்சவக்காரர் கேள்விக்கிணங்க இராசகோபுரம் இடிக்கப்பெற்று கீழ்ப்பகுதி வைரக் கருங்கற்களினால் கட்டப்பெற்று இராஜகோபுர மேல் பகுதியும் நல்ல அலங்கார முறையில் கட்டிமுடிக்கப் பெற்றது. முத்துமாரி அம்மனுக்கு சித்திரத் தேர் செய்ய வேண்டும் என்று முடிவு செய்ததில் ஊரவர்களே பணம் சேகரித்து 1979ம் ஆண்டு வரும் பெருந்திருவிழாவுக்கு முன் அம்மனுக்கு தேர் செய்வித்து முடித்தார்கள். பின்பு பிள்ளையாருக்கும் முருகனுக்கும் 1981ம் ஆண்டு திருவிழாவுக்கு முன் செய்யப் பெற்று விட்டன. இக்கோயில் ப+சைகள் திருவிழாக்கள் எல்லாம் மிகச் சிறப்பாகவும் அலங்காரமாகவும் நடைபெற்று வருகின்றன. தொன்று தொட்டே இக்கோயிலில் சைவக்குருக்கள்களே பிரதம குருக்களாக இருந்து வருகின்றார்கள். 16.01.1963 தொடக்கம் சிவஸ்ரீ சோ. தண்டபாணி தேசிகர் அவர்கள் (ஜே.பி.அகிலஇலங்கை) பிரதம குருக்களாக இருந்து சிறப்பாகவும் பக்தியுடனும் தொண்டாற்றி வருகிறார்கள்.
ஸ்ரீ முத்துமாரிஅம்மன் கோவில் தேர்முட்டியும், மோர் மடமும்

அம்மன் கோவிலின் ஒருபக்கத்தோற்றம்…

அம்மன் கோவில் சித்திரைத்தேர்…

தீர்த்தக் கடற்கரையில் தீர்த்தமாடும் அம்மனும், பக்தர்களும்…


வல்வை மக்களின் கைவினை திறனையும் கலை ரசணையையும் காட்டப்படும் இன்னுமொரு அங்கம் இந்த தீர்த்த திருவிழாவில் வைக்கப்படும் அரங்கார வளைவு…

(வல்வைநகர் வலைப் பதிவில் இருந்து தகவல்கள் திரட்டப்பட்டது. நன்றி)
Posted in Uncategorized
வல்வெட்டித்துறையிலுள்ள துறைமுகத்தில் ஒரு காலத்தில் “சலங்கு” எனப்படும் பாய்மரக்கப்பல்கள் பல காணப்படும். இக்கப்பல்களில் மூன்று நான்கு பாய்மரங்களும் பல பாய்களும் உண்டு. மிகவும் பெரிய இக்கப்பல்கள் இந்தியாவுடனும் தூரகிழக்கு நாடுகளுடனும் வணிகத்தில் ஈடுபட உதவி வந்தன. வல்வெட்டித்துறையில் காற்றடிக்கின்ற காலத்தில் இவற்றைக் காரை நகருடன் அண்டிய ஊர்காவற்றுறைத் துறைமுகத்தில் பாதுகாப்பாகக் கட்டிவிடும் வழக்கம் இருந்தது. அதுமட்டுமன்றி உணவுப்பொருட்களையும் இவை காரைநகருக்குக் கொண்டு செல்வதுண்டு. இதனை மையமாக வைத்து ஒரு நாட்டார் பாடல் தீவுப்பக்கங்களில் வழக்கிலுள்ளது.
வல்வெட்டித்துறைப் பாய்மரக்கப்பலில்
வந்து குவியுது பண்டமடி
வாய் நிறையத் திண்டு வெத்திலை போடலாம்
வாருங்கோ கும்மி அடியுங்கடி
வத்தை சலங்கு கட்டுமரம் தோணி
வள்ளங்கள் வந்து குவியுதடி
எத்தனை பண்டங்கள் ஏந்தி வருகுது
எல்லாமே கொள்ளை லாபமடி
தகவல் நன்றி: கலாநிதி காரை.செ.சுந்தரம்பிள்ளை
(சிதம்பரக் கல்லூரி நூற்றாண்டு மலர்)
Posted in Uncategorized
“வல்வை மக்கள் “திரைகடலோடியும் திரவியம் தேடு” என்பதற்கிணங்க சிறந்த கடலோடிகளாகவும் கப்பற் சொந்தக்காரர்களாகவும் கப்பல் கட்டுபவர்களாகவும் இருந்தார்கள். இதை இலங்கையின் முதலாவது பிரதமர் திரு டீ.எஸ். சேனநாயக்காவும் குறிப்பிட்டுள்ளதை மறக்க முடியாது. அன்னபூரணி அம்மாள் வல்வை சுந்தர மேஸ்திரியார் அவர்களால் 1930ம் ஆண்டு கட்டப்பட்டது. இக்கப்பல் இந்தியாவின் கரையொரப் பட்டினங்களுக்கும், பர்மா, பாகிஸ்தான், இந்தோணேசியா போன்ற நாடுகளுடன் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்தது. உலகத்தை ஒரு சின்ன வள்ளத்தில் உல்லாசப் பிரயாணத்தை மேற்கொண்டு வந்த திரு றொபின்சன் என்ற அமெரிக்க செல்வந்தபிரபு அன்னபூரணியை பார்க்க நேர்ந்தது. இவர் பிரபல நாவலாசிரியரும், ஆராச்சியாளரும், கடலோடியுமாவார். அன்னபூரணி உள்ளூர் வேப்பமரத்தைக் கொண்டு அழகுற அமைக்கப்பட்டது. இந்த பாய்மரக்கப்பலின் அழகிய அமைப்பையும் அதன் உறுதியையும் எந்த நீரோட்டத்திலும் இலகுவாகப் பயணம் செய்யும் தன்மையையும் கண்ட திரு றொபின்சன் இதை அமெரிக்காவுக்கு கொண்டு சென்றால் அது காட்சிப் பொருளாகவும் நூதனமாகவும் இருக்குமென விரும்பினார்.
1936ம் ஆண்டு அன்னபூரணியை விலை கொடுத்து வாங்கினார். அவர் இக்கப்பலை வல்வையைச் சேர்ந்த திரு கே. தம்பிப்பிள்ளை என்பவரின் தலைமையில் திரு தா. சபாரத்தினம், திரு ஐ.இரத்தினசாமி திரு சி.சிதம்பரப்பிள்ளை, திரு பூ.சுப்பிரமணியம் ஆகியோரின் உதவியுடன் அமெரிக்காவுக்குக் கொண்டு செல்லத் தீர்மானித்தார். அமெரிக்கா புறப்படுமுன் முன்பு திரு டபிள்யு.ஏ. றொபின்சன் கொழும்பு வாக்கர்ஸ் ஸ்தாபனத்தாரிடம் பெற்றுக்கொண்ட டீசல் இயந்திரமொன்றை முன்னேற்பாடாக கப்பலுக்குப் பொருந்தினார். அன்னபூரணி என்ற அக்கப்பலுக்கு திரு றொபின்சன் தன் மனைவியின் பெயரான ஷஷபிறிகன் ரைன்புளோரெனஸ் சி றொபின்சன் என்னும் பெயரைச் சூட்டினார். இதைத் தொடர்ந்து அவர்களுடைய வரலாறு படைத்த அந்த நீண்ட பயணம் ஆரம்பமாகியது. திரு டபிள்யு.ஏ.றொபின்சன் அமெரிக்காவில் தங்கி நின்ற பொழுது பிரபல கப்பல் தலைவரான டொனால்ட் எ.மக்கியஸ் என்பவரைச் சந்தித்து அன்னபூரணி அம்மாள் என்ற கப்பல் கிரேக்கத்திற்கு வரும்போது அதைச் சந்திக்கும்படி கூறினார்

வல்வெட்டித் துறையிலிருந்து அமெரிக்கா வரை கப்பலோட்டிய தமிழர்கள் என்கிற தலைப்பில் சுவையாக, நாமே கடலில் பயணிப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகிற கப்பலோட்டியின் கதை இது. பிரச்சனைகள், கடலின் அமைதி, சீறி எழும் கடலலைகள், திக்குத் தொ¢யாது தனித்து விடப்பட்டது போன்ற உணர்வு, கரையைக் காணும் பொழுது ஏற்படும் மகிழ்ச்சி, தமிழர்களின் திறன், கூட்டுமுயற்சியின் வெற்றி - என்பன போன்ற பல்வேறு உணர்வலைகளை உருவாக்குகிற நூல் இது. அன்னபூரணி என்ற அந்தக் கப்பலை நெஞ்சு சுமக்கிறது.
கொந்தளிப்பும், புயலும் நிறைந்த பயங்கரமான மத்திய தரைக்கடலையும், அத்திலாந்திக் சமுத்திரத்தையும் தாண்டும்வரை அக்கப்பலை வழி நடத்துமாறு கூறினார். கப்பல் ஏடனில் இருந்து கிறிக் துறைமுகத்தை வந்தடைந்ததும் கப்டன் திரு மக்குயிஸ் அக்கப்பலில் ஏறிக் கொண்டார்.
கப்டன் மக்குயிஸ் நீராவிக்கப்பலில் 42 வருட அனுபவமுடைய சிறந்த கடலோடியும், குளோசெஸ்ரரின் அதிசிறந்த தலைவர்களில் ஒருவருமாவார். ஆனால் இவர் பாய்க்கப்பலைச் செலுத்துவதில் அனுபவமில்லாதவராகவும் காலநிலை சீராக இருக்கும் பொழுதே எல்லாப் பாய்களையும் விரித்துக் கப்பலைச் செலுத்திய இலங்கை மாலுமிகளைப் பொறுத்தவரையில் பதட்டப்பட்டவராகவும் காணப்பட்டார்.
கப்பல் ஜிபிறேல்ரரில் இருந்து புறப்பட்டதும் அதற்கு அருகாமையில் ஓர் பயங்கரப்புயல் காற்று பெரும் இரைச்சலுடன் கப்பலை அதன் வழியில் இருந்து 250 மைல்களுக்கு அப்பால் இழுத்துச் சென்றது. வல்வையின் ஆறு மாலுமிகளும் ஆண்டவனைத் தொழுது கொண்டிருந்தனர். அவர்கள் மீண்டும் ஜிபிறோல்ரரை அடைந்த பொழுது திரும்பவும் பயணத்தைத் தொடர அனுகூலமான காற்றெதுவும் இல்லை. கப்பலில் பொருத்தப்பட்ட இயந்திரம் பழுதடைந்ததனால் அவர்கள் முழுக்க முழுக்க காற்றின் உதவியையே நாட வேண்டியதாயிற்று. ஓர் அமெரிக்க சரக்கு கப்பலில் இருந்த மாலுமிகள் அன்னபூரணி அம்மாளில் இருந்த கறுப்பரான இலங்கை மாலுமிகளைக் கண்டவுடன் இனத்துவேச வார்த்தைகளால் கொட்டி ஆர்ப்பாட்டம் செய்தனர். இப்படி ஒருநிலை இருந்தும் இழுவைக்காக அன்னபூரணி அம்மாளை அந்த அமெரிக்க கப்பலுடன் தொடுத்து விட்டனர். ஆனால் அவர்கள் ஜிபிறோல்ரர் துறைமுகத்தை விட்டு அதிகதூரம் நீங்க முன்னரே சரக்கு கப்பலின் பின்தளத்திற்கு அண்மையில் உள்ள கயிறு துண்டாயிற்று. இரண்டையும் இணைத்திருந்த தொடுவைக் கயிறு வேண்டும் என்றே வெட்டப்பட்டு இருந்தது. அதைத் தொடர்ந்து “புளோரன் சி றோபின்சன்” என்ற இரட்டைப் பாய்மரக்கப்பல் அங்கு வீசிய வர்ததகக் காற்றின் உதவியுடன் அத்திலாந்திக் சமுத்திரத்தில் சிறிது காலம் ஓடியது. இதே கால நிலை அவர்களுக்கு எவ்வளவு காலம் தான் இருக்க முடியும்?
திரும்பவும் நடுச்சமுத்திரத்தில் காற்று அவர்களை கைவிட்டதனால் எத்தனை நாட்களை அவர்கள் வீணே கழிக்க வேண்டியிருந்தது. கப்பலில் வைக்கப்பட்டிருந்த உலோக பீப்பாக்களில் சேமித்து வைத்த நீர் கெட்டு குடிப்பதற்கு கூடாததாக இருந்தது. உணவு முடிந்து அங்கே பற்றாக்குறை நிலவத் தொடங்கியது. ஓரளவு காற்றின் வேகம் குறைய ஆரம்பித்தது. நாற்பத்தியொரு நாட்களின் பின் புளோரன்சி றொபின்சன் என்னும் கப்பல் கெமில்ரனை வந்தடைந்த பொழுது அவர்களுக்கு அங்கு என்றுமே பார்க்க முடியாத வரவேற்பு காத்து இருந்தது. ஒன்பது நாட்களின் பின் அவர்கள் குளோசெஸ்ரர் நோக்கி பயணமானார்கள். அப்பொழுது இதமான
காற்று வீசிக் கொண்டிருந்தது. இக்காற்று முன்பு அசமந்த நிலையில் கழித்த நாட்களை ஈடுசெய்தது. ஆனால் கடல் மட்டம் வரைக்கும் கீழே தொங்கிக் கொண்டிருந்த மூடுபுகார் படலம் ஒரு மாபெரும் ஆபத்தைக் கொண்டு வந்தது. இப்புகார் மண்டலத்தின் காரணமாக பிரிகன்ரைன் விரைந்து வந்து கொண்டிருந்த போது வேறு ஒரு பாரிய கப்பலுடன் மோதுண்டு நொருங்கக் கூடிய நிலை ஏற்பட்டது. காப்டன் மாக்குயிஸ் தனது ஊது குழலினால் உரத்த சத்தமாக ஊளையிட்டார். கப்பலின் தளத்தில் நின்ற குழுவினர் தம்மால் இயன்றவரைக்கும் தமது பலம் அனைத்தையும் ஒன்று சேர்த்துக் கத்தினார்கள். ஆனால் எதையுமே உணராhர் போல் அப்பாரிய கப்பல் விரைந்து வந்து கொண்டிருந்தது. அவர்களால் வேகமாக வந்து கொண்டிருக்கும் அப்பாரிய கப்பலின் உயரமான பாய்மரங்களையும் அதன் பக்கங்களையும் அவதானிக்க முடிந்தது. அப்படி இருந்தும் அந்தவேளையில் அவர்கள் ஒன்றும் புரியாத அவநிலையில் தவித்தனர். இரண்டாவது தடவையாக மீண்டும் இலங்கைக் குழுவினர் ஆண்டவனைப் பிரார்த்தித்தனர். கண் இமைக்கும் சில அங்குல இடைவெளியில் அக்கப்பல் விலகிச் சென்றதால் தெய்வாதீனமாக பிறிகன்ரைன் மயிரிழையில் தப்பியது. இப்படிக் கடல் கொந்தளிப்பு இருந்தும் எத்தனையோ அபாயங்களில் இருந்தும் தப்பிய பிரிகன்ரைன் புளோரன்ஸ்சி றொபின்சன் அமெரிக்காவின் பிரசித்தி வாய்ந்த குளோசெஸ்ரர் துறைமுகத்தை அடைந்தது.
திரு வில்லியம் அல்பேட் றொபின்சன் கப்பலில் வந்த இக்குழுவை அமெரிக்காவின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான நியூயோர்க் நகருக்கு அழைத்துச் சென்றார். அங்கு அவர்களை மிக உயர்ந்த கட்டிடத்தில் அமைந்துள்ள சென்மொறிஸ் ஒன்தி பார்க் என்ற நவீன வசதிகள் படைத்த ஹோட்டல் ஒன்றில் தங்குவதற்கு வசதிகள் செய்து கொடுத்தார். அங்கு அவர்கள் அரச விருந்தினர்களாகவே கௌரவிக்கப்பட்டனர்.
உள்ளூர் மரமான வேப்பமரத்தில் செய்யப்பட்ட அக்கப்பல் பலரின் கவனத்தை ஈர்த்தது. ஆயிரக்கணக்கான அமெரிக்கர்கள் இரவென்றும் பகலென்றும் பாராது அதில் ஏறிப் பார்வையிட்ட வண்ணமே இருந்தனர். சில சமயங்கிளல் வேட்டியுடுத்த மாலுமிகள் தியானத்திலும் ஆழ்ந்திருப்பதை அவதானித்த மக்கள் ஆச்சரியமடைந்தனர். சில நாட்களின் பின்னர் வல்வை மாலுமிகள் அங்கிருந்து நீராவிக்கப்பலில் சிங்கப்பூர் வழியாக இலங்கை திரும்பினார்கள்.
1938 ஆகஸ்ட் 2ம் திகதி வெளியாகிய அமெரிக்க தினசரியான போஸ்ரன் குளோப் பத்திரிகையின் முற்பக்கச் செய்தியாக அதன் நிருபர் ஏ.பரோஸ் பின்வருமாறு எழுதியுள்ளார்.
ஆர்வம்மிக்க மாலுமிகள் 89அடி நீளமுள்ள புளோறன் சி. றொபின்சன் என்னும் கப்பலில் இன்று வந்து பொஸ்ரன் துறைமுகத்தை அடைந்தனர். இந்த ரகக்கப்பலில் பாய்களின் உதவியுடன் மாத்திரம் மேற்கு சமுத்திரத்தை கடப்பது இதுவே முதற்தடவையாகவும் கடைசி தடவையாகவும் இருக்கும். ஐந்து இந்துக்களான இலங்கையரையும் தாடி வளர்த்த இளம் அமெரிக்க கடலோடி ஒருவரையும் கொண்ட பிறிகன் ரைன் ஆனது ஜி.பி.றோல்ரரில் இருந்து போர் முடா வழியாகப் புறப்பட்டு இத்துறைமுகத்தை அடைந்தது. பெருமை வாய்ந்த பல வருகைகளைக் கண்ட பிரசித்தி பெற்ற இத்துறைமுகமானது நூறு வருடங்களாகக் கண்டிராத அளவுக்குப் பெருந்தொகையான கப்பற்தலைவர்களையும் படகோட்டிகளையும் உல்லாசப் பிரயாணிகள் முதலானோரையும் கண்டு களிப்பதற்கென தன்பால் கவர்ந்தது அக்கப்பல். வெறுங்காலுடன் பாய்மரங்களில் விரைவுடன் ஏறிடும் இந்துக்களை அங்கு குழுமியிருந்த மக்கள் வியப்புடன் அவதானித்தனர். உள்துறைமுகத்தை வந்தடைந்ததும் வாழ்த்து தெரிவிப்பதற்காக சுமார் இருபது படகுகள் அப்புதிய கப்பலின் மருங்குகளைச் சென்றடைந்தன. 1840ம் வருடத்து பிரித்தானிய சண்டைக்கப்பலையொத்த இக்கப்பல் எட்டு வருடங்களுக்கு முன் இலங்கையில் செய்யப்பட்டு அங்கிருந்து புறப்பட்டு இத்துறைமுகத்தை வந்தடைந்திருக்கிறது. கடலோடிகளின் நகரான வல்வெட்டித்துறையில் இருந்து இக்கப்பலில் புறப்பட்ட ஆறு மாலுமிகளுள் ஒருவர் மாத்திரமே இடை நடுவில் வீடு திரும்பினார்.

Posted in Uncategorized
இங்கு சில இடங்கள் குறிக்கப்பட்டுள்ளன. மேலும் இடங்கள் தொடர்ந்து பதியப்படும்.( Mapஐ பெரிதாக்கிப் பார்கக படத்தின் இடதுபுறம் கீழே உள்ள View Large map என்னும் Linkஐ கிளிக் பண்ணவும்)
View Larger Map
சிதம்பரக் கல்லூரிக்கு அந்தப்பக்கம் Googleல் காட்டப்படவில்லை அந்த படத்தை சரியாக இன்னோர் படத்தில் காட்டியுள்ளார்கள். ஆனால் அந்த படத்தில் மிக கிட்ட சென்று பார்க்கும் வசதி இதுவரை இல்லை.இங்கு கிளிக்பண்ணி பார்க்கவும்
Posted in Uncategorized
(இப்பதிவு திரு.கி.செ.துரை என்னும் வல்வை மகன் அலைகள் என்னும் வலைத்தளத்தில் எழுதியது.)
வல்வை சிதம்பராக்கல்லூரி, தொண்டைமானாறு மகாவித்தியாலயம், மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய இடங்களில் அதிபராகவும், ஆசிரியராகவும் இருந்த செயல் வீரர் திரு.ச.சத்திய மூர்த்தி கடந்த வாரம்(14.09.06ல் இக்கட்டுரை எழுதப்பட்ட நாளில் இருந்து) காலமான செய்தி அவரை அறிந்த அனைவருக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பாகும். அவரை அறியாதவர்கள் அறிந்தால் அவருடைய வாழ்வு அவர்களுக்கும் கிடைத்தற்கரிய மாபெரும் பொக்கிஷமாகும்.
வல்வை காட்டுவளவு என்ற கடற்கரையோர பகுதியில் திரு.திருமதி சரவணமுத்து தம்பதியர்க்கு மகனாகப் பிறந்த இவர் பேராதனை பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானப் பட்டதாரியாவார். வறுமையான ஒரு சூழலில் பிறந்து, வாழ்க்கையில் வெற்றிபெற்ற ஒருவராக இவர் வந்த கதை மிகவும் சுவாரசியமானது, ஒவ்வொருவரும் அறிய வேண்டியதாகும். பாடசாலை ஆசிரியராக இருந்து அதிபராகி, தென்னாபிரிக்காவரை தன்னுடைய பணியை விஸ்தரித்த அறிவார்ந்த ஆலமரம் இவர்.
நான் பேசுவதில் அதிக நம்பிக்கையற்றவன் எனது செயல்களினால்தான் நான் மற்றவருடன் பேசுகிறேன். இது சத்தியமூர்த்தி மாஸ்டர் அடிக்கடி சொல்லும் வாசகம். இதே வரிகளை நீங்கள் வேறு ஒருவரிடமிருந்தும் கேட்பீர்கள் அவர் வேறுயாருமல்ல தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு.வே. பிரபாகரன் அவர்கள்தான். தலைவர் பிரபாகரன் ஆளுமையுள்ள ஒருவராக வளர்ந்த காலத்தில் அவர் கற்ற வல்வை சிதம்பரக்கல்லூரியில் அதிபராக இருந்தவர், அவருடைய ஆசிரியர்களில் ஒருவாரான ச.சத்தியமூர்த்தி மாஸ்டர் என்பதை முதலிலேயே அறிந்து கொண்டால், அடுத்து அவரை இலகுவாக பல தளங்களிலும் புரிந்து கொள்ளலாம்.
அக்காலத்தில் சிதம்பராக்கல்லூரிக்கு சுமார் பத்துக்கிலோமீட்டர் சுற்றாடலில் இருந்து மாணவர்கள் வந்து கொண்டிருந்தார்கள். காலை 8.00 மணிக்கு தொடங்கும் பாடசாலை மாலை 4.00 மணிக்கு முடிவடையும். மாணவர்களுக்கு தரமான மதிய உணவைக் கொடுத்தால் அவர்களை ஆரோக்கியமாக வளர்த்தெடுக்கலாம் என்று திட்டமிட்டார். உடனடியாக சிங்கராசா என்ற திறமைசாலியை வேலைக்கு அமர்த்தி சிற்றுண்டிச்சாலையை ஆரம்பித்தார். பதினைந்து சதம் கொடுத்தால் போதும் மூன்று கறிகளும் சோறுமாக சுடச்சுட மதிய உணவு கிடைத்துவிடும். வெள்ளிக்கிழமைகளில் பாயாசத்துடன் சாப்பாடு கிடைக்கும். யாழ். குடாநாட்டில் எந்தப் பாடசாலைகளிலும் கற்பனைகூட பண்ண முடியாத காரியம் அது. செயலில் செய்து காட்டினார், அவரது திட்டம் பெரு வெற்றி பெற்றது. பசி வந்தால் பத்தும் பறந்துவிடும் என்பதை பாட்டாக மட்டும் பாடி என்ன பயன் அதைச் செயலாக்க வேண்டும், அதுவே கல்வி என்று கூறினார். இதுதான் சத்தியமூர்த்தி மாஸ்டர்.
சிறீலங்கா அரசாங்கத்தை நம்பி எதுவும் செய்துவிட முடியாது. பாடசாலை மாணவர்கள் அதிகமாக அதிகமாக ஆய்வு கூடம் உள்ளிட பல புதிய கட்டிடங்களை அமைக்க வேண்டும் என்ற நிலை உருவானது. உடனடியாக கல்வியமைச்சு ஒதுக்கிய சிறிய நிதியுடன் பாடசாலை மாணவர்களை சிரமாதானத்தில் ஈடுபடுத்தி கட்டிடம் கட்டி முடிக்கும் பணியை முடுக்கிவிட்டார். அவர் போன பாடசாலைகள் எல்லாமே சிரமதானத்தால் உருவாக்கப்பட்ட வகுப்பறைகள் புதுப் பொலிவுடன் மிளிரும். மாணவர்கள் வெறுமனே புத்தகக் கல்விக்குள் மூழ்கிக் கிடப்பதால் எதுவித பயனும் கிடையாது, தொழில் முறையில் அவர்கள் வளர வேண்டும். அதற்கு சிரமதானம் சிறந்த தொழிற்பயிற்சி என்பது அவருடைய தத்துவமாக இருந்தது. பல்கலைக்கழகம் போகாமலே மிகச்சிறந்த கைவினைத் தொழிலாளிகள் பலரை அவர் உருவாக்கிவிட்டார்.
சிதம்பராக்கல்லூரியில் அதிபாராக இருந்து அக்கல்லூரியை நல்ல நிலைக்கு உயர்த்திய பின்னர் தொண்டைமானாறு மகா வித்தியாலயத்திற்கு அதிபராக போனார். அக்காலத்திலே மேலும் பல நம்ப முடியாத, இன்றுவரை பலர் அறியாத சாதனைகளை எல்லாம் அங்கிருந்தே படைத்தார். அதில் முதலாவது தொண்டைமானாறு நன்னீர் ஏரித்திட்டம். சவராகி வரண்டு வரும் யாழ் குடாநாட்டை செல்வம் கொழிக்கும் விவசாய நிலமாக மாற்றும் திட்டமே இதுவாகும். இதனுடைய அடிப்படைச் சிந்தனையாளர் இவரே. இதற்கான விளக்கத்தை உலகவங்கி அதிகாரிகளுக்காக இவர் தயாரித்தபோது அருகில் இருந்தும், அதற்குரிய விளக்கப்படங்களை அவருடைய வழிகாட்டலில் வரைந்ததாலும் எனக்கு அவர் வைத்த கருத்துக்கள் அனைத்தும் இன்றும் பசுமரத்தாணி போல மனதில் பதிந்துள்ளன.
கடல் புகுவதால் தொண்டைமானாறு கடல் நீரேரி உப்பு நீரேரியாக உள்ளது. துருப்பிடிக்காத பிளாஸ்டிக் அணை மூலம் எப்படி கடல் நீரை தடுத்து நிறுத்துவது. குடாநாட்டை ஊடறுக்கும் அந்த ஒரே ஏரியில் மழை நீரை நிரப்பி அதை நன்னீரேரியாக மாற்றுவது எப்படி ? அதன் மூலம் குடாநாட்டில் பூரண தன்நிறைவுக்கு வழி காண்பது எப்படியென விளக்குவது அவருடைய திட்டமாகும். இரசாயன, பௌதிக விஞ்ஞானப் பட்டதாரியாக இருந்த காரணத்தால் மண் ஆய்விலும் ஈடுபட்டு, சவர் நிலத்தை நன்நிலமாக மாற்ற ஏரியின் கரையோரம் முழுவதும் புளியமர நடுகைத் திட்டத்தையும் கூடவே இணைத்திருந்தார். 1974 ல் இவர் தீட்டிய திட்டத்தை உலக வங்கி அதிகாரிகள் வெகுவாகப் பாராட்டினார்கள். ஆனால் தமிழன் உயர்வதை விரும்பாத சிறீலங்கா அரசு அதற்கு உடன்பட அடியோடு மறுத்துவிட்டது. நமது அக்கால அரசியல் தலைவர்களுக்கும் இவருடைய திட்டத்தைப் புரியும் தூரப் பார்வை இருந்ததாகக் கூற முடியாது. அன்றே இதைச் செய்திருந்தால் இன்று குடாநாட்டில் பராக்கிரம சமுத்திரம் போல தொண்டைமானாறு நன்னீரேரி உருவாகியிருக்கும், வறுமை பறந்திருக்கும்.
சிறீலங்கா அரசு நல்ல திட்டங்களுக்கு பணம் ஒதுக்காது என்பதை அதன் மூலம் உணர்ந்து கொண்டதும் இவரும் வேறு சில நண்பர்களும் ஒன்று சேர்ந்து புத்தவிகாரை போல ஒரு கட்டிடத்தை வரைந்து அதைக்கட்ட அனுமதி தரும்படி கோரினார்கள். அரசு மாதிரிப் படத்தைப் பார்த்ததும் உடன் பணத்தை ஒதுக்கியது. தொண்டைமானாறு அக்கரையிலேயே அக் கட்டிடத்தை கட்டி முடித்தார்கள். அது யாருக்கும் பயன்படவில்லை. இன்றும் இருக்கிறது, அங்கு ஆடுமாடுகளே படுத்துறங்குவதைக் காணலாம். இன்றுவரை சிறீலங்கா விமானங்கள் குண்டு வீசாத பத்திரமான இடமும் அதுதான் என்பதே வேடிக்கையான உண்மை. சிங்கள அரசின் பாரபட்சமான செயல்களை பலர் மேடை போட்டு முழங்கினார்கள். ஆனால் அதைக்கூட செயலால் உணர்தியவர் சத்தியமூர்த்தியாகும்.
நன்னீரேரித் திட்டம் சரிவாரமல் போனதும் அவர் சலிப்படைந்துவிடவில்லை. தொண்டைமானாறு வெளிக்கள ஆய்வு நிலையக் கட்டிடப்பணிகளை பொறுப்பெடுத்து அதைக் கட்டி முடித்தார். வெளிக்கள ஆய்வு நிலையம் சாதாரணமான ஓர் இடமல்ல. உலகத்தின் பல நவீன தொழில்நுட்ப உபகரணங்களால் நிறைந்த விஞ்ஞான ஆய்வுகூடம். குடாநாடு முழுவதும் இருந்து மாணவர்கள் அங்கு வந்து முகாமிட்டு கல்வி கற்கும் இடமாகும். அந்த வெளிக்கள நிலையத்தில் அறிஞர் சித்திரவேல் தலைமையிலான குழுவினர் சுமார் 30ற்கும் மேற்பட்ட யாழ்ப்பாணத்து மீன்களுக்கு சர்வதேசம் அங்கீகரிக்கும் வகையாகப் பொதுப் பெயரிட்டனர். பல மீன்களை பிடித்து அகைளின் இறக்கைகளில் பிளாஸ்டிக் மட்டையில் அடையாளம் கட்டி மறுபடியும் கடலில் விடுவார்கள். இம்மீன்கள் சிலாபம், நீர்கொழும்புவரை பல இடங்களில் பிடிபடும். அத்தருணம் அம்மீன்களுக்கு அங்குள்ள பெயர்கள், அதே மீன்களுக்கு இங்குள்ள பெயர்கள் எல்லாம் தொகுத்து, செய்யப்பட்ட செந்தரப்பட்ட பெயரிடும் சிறந்த முயற்சி இதுவாகும். இதைச் செய்து நூலாக அச்சடித்து இலங்கை பூராவும் விநியோகம் செய்தது வெளிக்கள ஆய்வு நிலையம்தான். ஒரு தனிநாடு கண்டால் அங்குள்ள உயிரினங்களின் பொதுப்பெயர் பட்டியல் அவசியம். அதற்கான ஒரு முயற்சிபோலவே அன்று இது மிளிர்ந்தது. ஆசிரியர் சித்திரவேல் இதற்காக செக்கோசுலாவக்கியா சென்று பயிற்சி பெற்று வந்திருந்தார்.
அதன் பின்னர் தொண்டைமானாறு நீரேரியில் சீனாவில் இருந்து பாலை மீன்களை இறக்குமதி செய்து, வலையால் செய்யப்பட்ட தொட்டிகளில் அடைத்து விற்பனை செய்யும் முறையை அறிமுகம் செய்தார். இன்று டென்மார்க் போன்ற மீன் பிடித்தலில் முன்னேறிய நாடுகள் செய்யும் அத்தனை நுட்பங்களையும் முப்பது ஆண்டுகளுக்கு முன்னரே யாழ்.குடாநாட்டிற்கு கொண்டுவந்த நவீன சிந்தனையாளராக இருந்தார். அத்துடன் அவர் நின்றுவிடவில்லை. கடற்றொழிலை ஒரு பாடமாக மாற்ற முயற்சித்தார். அக்காலத்தே இவரோடு நானும் இணைந்து செயற்பட்டேன். இலங்கைக்கான கடற்றொழில் பாடப்புத்தகத்தையும், பாடத்திட்டத்தையும் கல்வியமைச்சிற்காக தயாரித்த குழுவில் நாம் முக்கிய இடம் வகித்தோம்.
அந்த எண்ணங்களை உணர்ந்த ஜப்பானிய அரசு அவரைக் கொழும்பிற்கு அழைத்தது. நேரடியாக சென்று தமிழீழம் என்னும் தேசம் கடற்றொழிலாலேயே சுயநிறைவுப் பொருளாதாரத்தை அடைந்துவிடலாம் என்பதை ஜப்பானிய கடற்றொழில் நிபுணர்களுக்கு விளக்கினார். அதனால் அக மகிழ்ந்த ஜப்பானிய நிபுணர்கள் கடலில் மீன்கள் இருப்பதை கண்டறியும் ஸ்கனர், கடல் மண் ஆய்வு மூலம் கடலட்டை, கடல்முத்துக்கள் தேடும் ஆய்வுக் கருவிகள் என்று ஒரு லொறி நிறைய புத்தம் புதிய மீன்பிடிக் கருவிகளை அன்பளிப்பு செய்தனர். டென்மார்க்கில் உள்ள மீன் பிடிப்பாடசாலைகளில் இன்றும் கூட அதில் இருந்த பல கருவிகளை என்னால் காண முடியவில்லை. அந்தக் கருவிகளை இயக்கவும், அதன் மூலம் நவீன கடற்றொழிலை விருத்தி செய்யும் பயிற்சிகளை ஜப்பானிய அதிகாரிகளிடம் பெற்றோம். இது ஒரு முக்கிய சம்பவம், இதை இன்றும் அறிந்தவர் யாருமிலர். அதுதவிர யாழ் குடாநாட்டு கடலட்டைகளை எப்படி கோடான கோடி பணம் குவிக்கும் தொழிலாக மாற்றலாமென்பதையும் ஜப்பானிய நிபுணர் எடுத்துரைத்தனர். இனப்போரால் எல்லாமே அழிந்தது பிந்திய கதை.
அதே காலத்தில் பத்து நிமிடங்களில் பொருத்தி முடிக்கும் அரிஸ்பார் கதிரைகளை செய்து இதர பாடசாலைகளுக்கு வழங்கும் பணி கல்வியமைச்சில் அறிமுகமாகியிருந்தது. இதற்கு தலைமை தாங்கியவர் சிறந்த மனிதர் கல்வி அதிகாரி மல்லாகம் ஈ.வி.ராமநாதனாகும். இவருடன் இணைந்து புளியங்குளத்தில் இருந்து ஒரு லொறியில் யாவறணை மரத்தை இறக்கி, கல்வியங்காடு இயந்திர மர அரிவு ஆலையில் அதை அரிந்து 150 மேசைகளையும், கதிரைகளையும் பாடசாலை மாணவர்களை வைத்தே உருவாக்கினோம். அதன் மூலம் பாடசாலைக்கு பெரு நிதியீட்டிக் கொடுத்தோம். அதற்கு உறுதுணையாக இருந்தவர் ச.சத்தியமூர்த்திதான்.
யாழ். குடாநாட்டு மீனவர்களுக்கு வருமானத்தை அதிகரிக்க புதியதோர் வழிகாட்டலையும் இவரே செய்தார். இவருடைய சகோதரர் விநாயகத்தின் வள்ளத்தின் மூலம் லோமியனுக்கு மீன்பிடிக்கப் போகும் முறையை அறிமுகம் செய்தார். மூன்று தினங்கள் வள்ளத்தில் போய் ஆழ் கடலிலேயே தங்கி மீன் பிடிக்கும் முறை இது. பீற்று பாங் கடலடித்தள மேடையில் மீன்கள் கூடும் பருவத்தில் பொருந்தொகையான மீன்களைப் பிடிக்கும் முறை இதுவாகும். ஒரு தடவை போய் வந்தால் அப்பணத்தில் ஒரு புதிய வீட்டையே கட்டிவிடலாம். ஆனாலும் பிடிக்கப்படும் மீனைப் பழுதடையாமல் காக்க பாரிய கப்பல்கள் அவசியம். மீனை கடலில் வைத்தே ரின்னில் அடைக்க வேண்டும் என்பதையும் அங்கு பிடிபடும் பெருந்தொகை மீன்கள் உணர்த்தின. அங்கு பிடிபடும் எல்லா மீன்களும் சிவப்பு நிறத்திலேயே இருக்கும். இந்த அதிக மீன் படும் இலக்கை இன்றுவரை நமது மீனவர் சரியாக பயன்படுத்தவில்லை. ஜப்பானிய கப்பல்களே இப்போது அந்த இடத்தில் நிற்கின்றன. ஆனால் அன்றே தனது அறிவால் லோமியன் மீன்பிடியை உற்சாகப் படுத்தியவர் இவராகும். அமைதி வந்தால் தமிழீழத்தில் என்ன இருக்கிறதெனக் கேட்டு கேலி செய்யும் அறிவிலிகளுக்கு பதில் சொல்ல லோமியன் மீன்பிடியே போதியதாகும்.
அறிவின் போதாமையால் நாங்கள் எங்களிடம் எதுவுமே இல்லை என்று நினைக்கிறோம். ஆனால் எல்லாமே நம்மிடம் இருக்கிறது, விடிவு வந்தால் சொந்தக் காலிலேயே நிற்கலாம் என்று எப்போதும் சொல்வார். அதற்கும் ஓர் உதாரணத்தைத் தர முடியும். ஒரு நாள் பாடசாலைக் கலை விழாவிற்கு நாடக மேடை அமைக்க வேண்டிய நிலை வந்தது. கறுப்புத் திரைச்சீலையாலேயே மேடை போட வேண்டிய தேவை ஏற்பட்டது. வாடகைக்கு அதை எடுப்பதானால் பெரும் பணம் செலவாகும். அவருடைய மூளை வேலை செய்தது. பாடசாலையில் யூரியா அடைத்து வரும் கழிவுப் பைகள் ஏராளமிருந்தன. சட்டென அவற்றை மூலப் பொருளாக்கி, அவற்றுக்கு கறுப்பு வர்ணம்பூசி, துருப்பிடித்த சக்கர றேசர்களை அசிற்றில் போட்டு உருளவைத்து இன்று நாம் நினைத்தே பார்க்க முடியாத நவீன மேடையை அமைத்தார். இப்படி எல்லாமே இருக்கிறது, தேடுங்கள், தேடுங்கள் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்பார்.
அவர் தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயத்தின் தீவிர பக்தராக இருந்தார். இராணுவம் எரித்த சித்திரத்தேர் உருவாக்கத்தில் இவரும் முன்நின்று உழைத்தவரே. கந்தபுராணத்தை சுவைபட படித்து மற்றவருக்கும் கூறுவது அவருடைய ஓய்வு நேர இன்பம். தொண்டைமானாற்றில் தொடங்கினால் தோல்வியில் முடியாது என்று கூறுவார். மேலும் விடுதலைப் போராட்டத்தின் முதலாவது குண்டு வெடித்தது தொண்டைமானாறு மகாவித்தியாலயத்தில்தான். அவர் எப்போதுமே தமிழீழத் தேசியத் தலைவரில் உயர்ந்த அன்பு பாராட்டி வாழ்ந்தார். முருகனைப் போற்றி வாழ்ந்த அவரை தமிழ் வளர்த்த கந்தவேள் என்றும் காத்து நின்றார். அதை உணர்த்தவும் ஒரு சம்பவம் அவருடைய வாழ்வில் நடைபெற்றது.
அன்று அவருடைய வெற்றியைக் கண்டு பொறுக்க முடியாத சில ஆசிரியர்கள் அவரை அதிபர் பதவியிலிருந்து அகற்ற முயன்றார்கள். பல முயற்சிகள் செய்தும் அதைச் சாத்தியமாக்க அவர்களால் இயலவில்லை. கடைசியில் ஒரு திட்டம் தீட்டினார்கள். பாடசாலையில் ஒரு கைத்துப்பாக்கியை வைத்துவிட்டு பாடசாலைக்குள் வைத்து இவர் இயக்கம் நடாத்துவதாக போலீசில் முறைப்பாடு செய்து, இவரை சிறையில் தள்ளுவது அவர்கள் தீட்டிய திட்டம். ஆனால் அவர்கள் துப்பாக்கியை மறைத்து வைத்திருந்த இடத்தை போலீசாரிடம் கூற முன்னரே முருகன் அவருக்குக் காட்டினார். தற்செயலாக அந்தத் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு அவர் போலீஸ் நிலையம் சென்;று ஒப்படைத்தார். அவர் துப்பாக்கியை ஒப்படைத்த சில மணி நேரங்களில் அது குறித்த மொட்டைக்கடதாசி போலீஸ் நிலையம் போய்ச் சேர்ந்தது. முன்னரே துப்பாக்கி கிடைத்திருக்காவிட்டால் அவரை போலீஸ் என்ன செய்திருக்கும் என்பதை இங்கு எழுத வேண்டிய அவசியமில்லை. அன்று தன்னை ஆபத்திலிருந்து காத்தது முருகனே என்று ஒரு நாள் தபாலில் எனக்கு எழுதியிருந்தார். அதன் பின்னர் அங்கிருப்பது சரியில்லை என்று தென்னாபிரிக்கா சென்று சில காலம் பணிபுரிந்து மறுபடியும் ஊர் திரும்பினார். பிற்பகுதியில் நோய்வாய்ப்பட்டாலும் முருக தொண்டராக இருந்தார். வல்வை சவ வண்டில் உட்பட பல புதிய உருவாக்கங்களுக்கு உழைத்தார். சென்ற வாரம் அவர் போற்றிய முருகன் காலடியிலேயே சங்கமித்துள்ளார்.
குழந்தைகள் இல்லாவிட்டாலும், எல்லாக் குழந்தைகளையும் தன் பிள்ளையாக நினைத்து முன்னேற்றிய இந்த மனிதரின் வாழ்வில் நான் கண்ட உண்மைகள் பல. ஒன்று எளிமை, இரண்டு உண்மை, மூன்று புதுமையை கண்டு பிடித்தல், நான்கு எல்லாம் நம்மிடம் உண்டு அறிவால் கண்டு பிடித்தால் சுவர்க்கம் காலடியில் என்பதுதான். ஒவ்வொரு மனிதரும் அறிய வேண்டிய இவரை இன்று யாழ். குடாநாட்டில் நடைபெறும் போரால் எவராலும் உரியபடி அறிய முடியவில்லை. இருந்தாலும் மற்றவர் அறியாமல் இருப்பதே அவருடைய உண்மையான திறமைக்கு அடையாளமாகும்.
யாரும் பாராட்ட வேண்டும் என்பதற்காக புவியில் பூக்கள் மலர்வதில்லை.
தமது கடமையை சரிவரச் செய்த பூக்கள் தெய்வத்தின் காலடியில் விழுகின்றன. ஞானத்தமிழன் முருகனின் காலடியில் ஒரு புதிய பூ! அதுதான் செயல்வீரர் ச. சத்தியமூர்த்தி. இந்த செயல் வீரனைப் போற்றிக் காத்து பதமளித்த செல்வச்சந்நிதி வாழ் தீந்தமிழ் வேல் முருகா உன்பாதங்களை இக்கட்டுரை வணங்குகிறது.
சேவலும் மயிலுமாக நிற்கும் செல்வச்சந்நிதி வேலன் இன்று சத்தியமூர்த்தியையும் தன்னுடன் இணைத்தான்.
Posted in Uncategorized