“வல்வை மக்கள் “திரைகடலோடியும் திரவியம் தேடு” என்பதற்கிணங்க சிறந்த கடலோடிகளாகவும் கப்பற் சொந்தக்காரர்களாகவும் கப்பல் கட்டுபவர்களாகவும் இருந்தார்கள். இதை இலங்கையின் முதலாவது பிரதமர் திரு டீ.எஸ். சேனநாயக்காவும் குறிப்பிட்டுள்ளதை மறக்க முடியாது. அன்னபூரணி அம்மாள் வல்வை சுந்தர மேஸ்திரியார் அவர்களால் 1930ம் ஆண்டு கட்டப்பட்டது. இக்கப்பல் இந்தியாவின் கரையொரப் பட்டினங்களுக்கும், பர்மா, பாகிஸ்தான், இந்தோணேசியா போன்ற நாடுகளுடன் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்தது. உலகத்தை ஒரு சின்ன வள்ளத்தில் உல்லாசப் பிரயாணத்தை மேற்கொண்டு வந்த திரு றொபின்சன் என்ற அமெரிக்க செல்வந்தபிரபு அன்னபூரணியை பார்க்க நேர்ந்தது. இவர் பிரபல நாவலாசிரியரும், ஆராச்சியாளரும், கடலோடியுமாவார். அன்னபூரணி உள்ளூர் வேப்பமரத்தைக் கொண்டு அழகுற அமைக்கப்பட்டது. இந்த பாய்மரக்கப்பலின் அழகிய அமைப்பையும் அதன் உறுதியையும் எந்த நீரோட்டத்திலும் இலகுவாகப் பயணம் செய்யும் தன்மையையும் கண்ட திரு றொபின்சன் இதை அமெரிக்காவுக்கு கொண்டு சென்றால் அது காட்சிப் பொருளாகவும் நூதனமாகவும் இருக்குமென விரும்பினார்.
1936ம் ஆண்டு அன்னபூரணியை விலை கொடுத்து வாங்கினார். அவர் இக்கப்பலை வல்வையைச் சேர்ந்த திரு கே. தம்பிப்பிள்ளை என்பவரின் தலைமையில் திரு தா. சபாரத்தினம், திரு ஐ.இரத்தினசாமி திரு சி.சிதம்பரப்பிள்ளை, திரு பூ.சுப்பிரமணியம் ஆகியோரின் உதவியுடன் அமெரிக்காவுக்குக் கொண்டு செல்லத் தீர்மானித்தார். அமெரிக்கா புறப்படுமுன் முன்பு திரு டபிள்யு.ஏ. றொபின்சன் கொழும்பு வாக்கர்ஸ் ஸ்தாபனத்தாரிடம் பெற்றுக்கொண்ட டீசல் இயந்திரமொன்றை முன்னேற்பாடாக கப்பலுக்குப் பொருந்தினார். அன்னபூரணி என்ற அக்கப்பலுக்கு திரு றொபின்சன் தன் மனைவியின் பெயரான ஷஷபிறிகன் ரைன்புளோரெனஸ் சி றொபின்சன் என்னும் பெயரைச் சூட்டினார். இதைத் தொடர்ந்து அவர்களுடைய வரலாறு படைத்த அந்த நீண்ட பயணம் ஆரம்பமாகியது. திரு டபிள்யு.ஏ.றொபின்சன் அமெரிக்காவில் தங்கி நின்ற பொழுது பிரபல கப்பல் தலைவரான டொனால்ட் எ.மக்கியஸ் என்பவரைச் சந்தித்து அன்னபூரணி அம்மாள் என்ற கப்பல் கிரேக்கத்திற்கு வரும்போது அதைச் சந்திக்கும்படி கூறினார்

வல்வெட்டித் துறையிலிருந்து அமெரிக்கா வரை கப்பலோட்டிய தமிழர்கள் என்கிற தலைப்பில் சுவையாக, நாமே கடலில் பயணிப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகிற கப்பலோட்டியின் கதை இது. பிரச்சனைகள், கடலின் அமைதி, சீறி எழும் கடலலைகள், திக்குத் தொ¢யாது தனித்து விடப்பட்டது போன்ற உணர்வு, கரையைக் காணும் பொழுது ஏற்படும் மகிழ்ச்சி, தமிழர்களின் திறன், கூட்டுமுயற்சியின் வெற்றி - என்பன போன்ற பல்வேறு உணர்வலைகளை உருவாக்குகிற நூல் இது. அன்னபூரணி என்ற அந்தக் கப்பலை நெஞ்சு சுமக்கிறது.
கொந்தளிப்பும், புயலும் நிறைந்த பயங்கரமான மத்திய தரைக்கடலையும், அத்திலாந்திக் சமுத்திரத்தையும் தாண்டும்வரை அக்கப்பலை வழி நடத்துமாறு கூறினார். கப்பல் ஏடனில் இருந்து கிறிக் துறைமுகத்தை வந்தடைந்ததும் கப்டன் திரு மக்குயிஸ் அக்கப்பலில் ஏறிக் கொண்டார்.
கப்டன் மக்குயிஸ் நீராவிக்கப்பலில் 42 வருட அனுபவமுடைய சிறந்த கடலோடியும், குளோசெஸ்ரரின் அதிசிறந்த தலைவர்களில் ஒருவருமாவார். ஆனால் இவர் பாய்க்கப்பலைச் செலுத்துவதில் அனுபவமில்லாதவராகவும் காலநிலை சீராக இருக்கும் பொழுதே எல்லாப் பாய்களையும் விரித்துக் கப்பலைச் செலுத்திய இலங்கை மாலுமிகளைப் பொறுத்தவரையில் பதட்டப்பட்டவராகவும் காணப்பட்டார்.
கப்பல் ஜிபிறேல்ரரில் இருந்து புறப்பட்டதும் அதற்கு அருகாமையில் ஓர் பயங்கரப்புயல் காற்று பெரும் இரைச்சலுடன் கப்பலை அதன் வழியில் இருந்து 250 மைல்களுக்கு அப்பால் இழுத்துச் சென்றது. வல்வையின் ஆறு மாலுமிகளும் ஆண்டவனைத் தொழுது கொண்டிருந்தனர். அவர்கள் மீண்டும் ஜிபிறோல்ரரை அடைந்த பொழுது திரும்பவும் பயணத்தைத் தொடர அனுகூலமான காற்றெதுவும் இல்லை. கப்பலில் பொருத்தப்பட்ட இயந்திரம் பழுதடைந்ததனால் அவர்கள் முழுக்க முழுக்க காற்றின் உதவியையே நாட வேண்டியதாயிற்று. ஓர் அமெரிக்க சரக்கு கப்பலில் இருந்த மாலுமிகள் அன்னபூரணி அம்மாளில் இருந்த கறுப்பரான இலங்கை மாலுமிகளைக் கண்டவுடன் இனத்துவேச வார்த்தைகளால் கொட்டி ஆர்ப்பாட்டம் செய்தனர். இப்படி ஒருநிலை இருந்தும் இழுவைக்காக அன்னபூரணி அம்மாளை அந்த அமெரிக்க கப்பலுடன் தொடுத்து விட்டனர். ஆனால் அவர்கள் ஜிபிறோல்ரர் துறைமுகத்தை விட்டு அதிகதூரம் நீங்க முன்னரே சரக்கு கப்பலின் பின்தளத்திற்கு அண்மையில் உள்ள கயிறு துண்டாயிற்று. இரண்டையும் இணைத்திருந்த தொடுவைக் கயிறு வேண்டும் என்றே வெட்டப்பட்டு இருந்தது. அதைத் தொடர்ந்து “புளோரன் சி றோபின்சன்” என்ற இரட்டைப் பாய்மரக்கப்பல் அங்கு வீசிய வர்ததகக் காற்றின் உதவியுடன் அத்திலாந்திக் சமுத்திரத்தில் சிறிது காலம் ஓடியது. இதே கால நிலை அவர்களுக்கு எவ்வளவு காலம் தான் இருக்க முடியும்?
திரும்பவும் நடுச்சமுத்திரத்தில் காற்று அவர்களை கைவிட்டதனால் எத்தனை நாட்களை அவர்கள் வீணே கழிக்க வேண்டியிருந்தது. கப்பலில் வைக்கப்பட்டிருந்த உலோக பீப்பாக்களில் சேமித்து வைத்த நீர் கெட்டு குடிப்பதற்கு கூடாததாக இருந்தது. உணவு முடிந்து அங்கே பற்றாக்குறை நிலவத் தொடங்கியது. ஓரளவு காற்றின் வேகம் குறைய ஆரம்பித்தது. நாற்பத்தியொரு நாட்களின் பின் புளோரன்சி றொபின்சன் என்னும் கப்பல் கெமில்ரனை வந்தடைந்த பொழுது அவர்களுக்கு அங்கு என்றுமே பார்க்க முடியாத வரவேற்பு காத்து இருந்தது. ஒன்பது நாட்களின் பின் அவர்கள் குளோசெஸ்ரர் நோக்கி பயணமானார்கள். அப்பொழுது இதமான
காற்று வீசிக் கொண்டிருந்தது. இக்காற்று முன்பு அசமந்த நிலையில் கழித்த நாட்களை ஈடுசெய்தது. ஆனால் கடல் மட்டம் வரைக்கும் கீழே தொங்கிக் கொண்டிருந்த மூடுபுகார் படலம் ஒரு மாபெரும் ஆபத்தைக் கொண்டு வந்தது. இப்புகார் மண்டலத்தின் காரணமாக பிரிகன்ரைன் விரைந்து வந்து கொண்டிருந்த போது வேறு ஒரு பாரிய கப்பலுடன் மோதுண்டு நொருங்கக் கூடிய நிலை ஏற்பட்டது. காப்டன் மாக்குயிஸ் தனது ஊது குழலினால் உரத்த சத்தமாக ஊளையிட்டார். கப்பலின் தளத்தில் நின்ற குழுவினர் தம்மால் இயன்றவரைக்கும் தமது பலம் அனைத்தையும் ஒன்று சேர்த்துக் கத்தினார்கள். ஆனால் எதையுமே உணராhர் போல் அப்பாரிய கப்பல் விரைந்து வந்து கொண்டிருந்தது. அவர்களால் வேகமாக வந்து கொண்டிருக்கும் அப்பாரிய கப்பலின் உயரமான பாய்மரங்களையும் அதன் பக்கங்களையும் அவதானிக்க முடிந்தது. அப்படி இருந்தும் அந்தவேளையில் அவர்கள் ஒன்றும் புரியாத அவநிலையில் தவித்தனர். இரண்டாவது தடவையாக மீண்டும் இலங்கைக் குழுவினர் ஆண்டவனைப் பிரார்த்தித்தனர். கண் இமைக்கும் சில அங்குல இடைவெளியில் அக்கப்பல் விலகிச் சென்றதால் தெய்வாதீனமாக பிறிகன்ரைன் மயிரிழையில் தப்பியது. இப்படிக் கடல் கொந்தளிப்பு இருந்தும் எத்தனையோ அபாயங்களில் இருந்தும் தப்பிய பிரிகன்ரைன் புளோரன்ஸ்சி றொபின்சன் அமெரிக்காவின் பிரசித்தி வாய்ந்த குளோசெஸ்ரர் துறைமுகத்தை அடைந்தது.
திரு வில்லியம் அல்பேட் றொபின்சன் கப்பலில் வந்த இக்குழுவை அமெரிக்காவின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான நியூயோர்க் நகருக்கு அழைத்துச் சென்றார். அங்கு அவர்களை மிக உயர்ந்த கட்டிடத்தில் அமைந்துள்ள சென்மொறிஸ் ஒன்தி பார்க் என்ற நவீன வசதிகள் படைத்த ஹோட்டல் ஒன்றில் தங்குவதற்கு வசதிகள் செய்து கொடுத்தார். அங்கு அவர்கள் அரச விருந்தினர்களாகவே கௌரவிக்கப்பட்டனர்.
உள்ளூர் மரமான வேப்பமரத்தில் செய்யப்பட்ட அக்கப்பல் பலரின் கவனத்தை ஈர்த்தது. ஆயிரக்கணக்கான அமெரிக்கர்கள் இரவென்றும் பகலென்றும் பாராது அதில் ஏறிப் பார்வையிட்ட வண்ணமே இருந்தனர். சில சமயங்கிளல் வேட்டியுடுத்த மாலுமிகள் தியானத்திலும் ஆழ்ந்திருப்பதை அவதானித்த மக்கள் ஆச்சரியமடைந்தனர். சில நாட்களின் பின்னர் வல்வை மாலுமிகள் அங்கிருந்து நீராவிக்கப்பலில் சிங்கப்பூர் வழியாக இலங்கை திரும்பினார்கள்.
1938 ஆகஸ்ட் 2ம் திகதி வெளியாகிய அமெரிக்க தினசரியான போஸ்ரன் குளோப் பத்திரிகையின் முற்பக்கச் செய்தியாக அதன் நிருபர் ஏ.பரோஸ் பின்வருமாறு எழுதியுள்ளார்.
ஆர்வம்மிக்க மாலுமிகள் 89அடி நீளமுள்ள புளோறன் சி. றொபின்சன் என்னும் கப்பலில் இன்று வந்து பொஸ்ரன் துறைமுகத்தை அடைந்தனர். இந்த ரகக்கப்பலில் பாய்களின் உதவியுடன் மாத்திரம் மேற்கு சமுத்திரத்தை கடப்பது இதுவே முதற்தடவையாகவும் கடைசி தடவையாகவும் இருக்கும். ஐந்து இந்துக்களான இலங்கையரையும் தாடி வளர்த்த இளம் அமெரிக்க கடலோடி ஒருவரையும் கொண்ட பிறிகன் ரைன் ஆனது ஜி.பி.றோல்ரரில் இருந்து போர் முடா வழியாகப் புறப்பட்டு இத்துறைமுகத்தை அடைந்தது. பெருமை வாய்ந்த பல வருகைகளைக் கண்ட பிரசித்தி பெற்ற இத்துறைமுகமானது நூறு வருடங்களாகக் கண்டிராத அளவுக்குப் பெருந்தொகையான கப்பற்தலைவர்களையும் படகோட்டிகளையும் உல்லாசப் பிரயாணிகள் முதலானோரையும் கண்டு களிப்பதற்கென தன்பால் கவர்ந்தது அக்கப்பல். வெறுங்காலுடன் பாய்மரங்களில் விரைவுடன் ஏறிடும் இந்துக்களை அங்கு குழுமியிருந்த மக்கள் வியப்புடன் அவதானித்தனர். உள்துறைமுகத்தை வந்தடைந்ததும் வாழ்த்து தெரிவிப்பதற்காக சுமார் இருபது படகுகள் அப்புதிய கப்பலின் மருங்குகளைச் சென்றடைந்தன. 1840ம் வருடத்து பிரித்தானிய சண்டைக்கப்பலையொத்த இக்கப்பல் எட்டு வருடங்களுக்கு முன் இலங்கையில் செய்யப்பட்டு அங்கிருந்து புறப்பட்டு இத்துறைமுகத்தை வந்தடைந்திருக்கிறது. கடலோடிகளின் நகரான வல்வெட்டித்துறையில் இருந்து இக்கப்பலில் புறப்பட்ட ஆறு மாலுமிகளுள் ஒருவர் மாத்திரமே இடை நடுவில் வீடு திரும்பினார்.
